நஞ்சே மிஞ்சும்....

Saturday, August 15, 2009

இயற்கைக்கும் உழவுக்கும் வந்தனை செய்வோம்.....

"தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டம் 2009" நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண்மையை முறைப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் இம்மசோதாவின்படி, வேளாண்மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அதில் வேளாண் பட்டதாரிகளின் பெயர்களை பதிவு செய்து, அவர்கள் மட்டுமே வேளாண்மை தொடர்பாக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவேண்டும். வேறு யாராவது விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்களுக்கு ரூ.5000 அபராதமும், மீண்டும் அவ்வாறு செய்தால் ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் "இயற்கை விவசாய முறை தடுக்கப்படும், மரபணு மாற்ற தொழில்நுட்பங்கள் விவசாயிகள் மீது திணிக்கப்படும், விவசாயிகள் வேளாண்மயிலிருந்து ஒதுக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்கும்" என்றுகூறி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் உரங்களையும், களைக்கொல்லி போன்ற பூச்சிமருந்துகளையும் மண்ணில் கொட்டியதால் நம் தாய்மண் வளமிழந்து நஞ்சாகிப் போனதுடன், சுற்றுச்சூழலும் மாசடைந்து கிடக்கிறது. இப்போது சில காலமாக நம்மாழ்வார் போன்ற விஞ்ஞானிகளும், விகடன், தினமலர் போன்ற ஊடகங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதைத் தடை செய்யவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை தமிழக அரசின் கையில் இருக்கும்போது. இம்மசோதாவின்படி நியமிக்கப்படும் வேளாண்பட்டதாரிகள் விவசாயிகளுக்கு அதிக அளவு உரமிடவும், பூச்சிமருந்து அடிக்கவும் சிபாரிசு செய்வார்கள். அதன் மூலம் ஆதாயம்பெரும் நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவார்கள். உர இறக்குமதியிலும் லாபம் பார்க்கலாம். உரக்கலப்படம் செய்பவர்களை அனுசரித்தால் அவர்களிடம் இருந்தும் வருமானம் வரும்.அதனால்தான் இம்மசோதாவை எதிர்க்கட்சிகளும் எதிர்க்கவில்லை. நாளை ஆளும் கட்சியானால் அவர்களுக்கும் லாபம்தானே?

பூமி வெப்பமடைதலுக்கான நான்கு காரணங்களில் விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன பூச்சிகொல்லிகளும், உரமும் ஒன்றாகும். மேலும் ரசாயனங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ததால் விவசாயிகளின் நண்பன் எனப்படும் மண்புழுவைக்கூட அழித்துவிட்டு இப்போது செயற்கையாக உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். இனி விவசாயிகளின் பெரிய சொத்தான விதைமுதலையும் இழந்துவிட்டு10கிராம் 500, 1000 என்று கொடுத்து வாங்கும் நிலை வரப்போகிறது.

ரசாயனங்களைக் கொட்டி மண்ணைக்கொன்றபின் விவசாயமே செய்யமுடியாது. உணவுப்பொருட்களும் உற்பத்தியாகாது. ஆனால் அதிலும் அரசியல் வா(வியா)திகளுக்கு லாபம்தான். உணவு தானியங்களை இறக்குமதி செய்து அதிலும் கொள்ளை அடிக்கலாமே...... ஆனால் இத்தனை வழிகளில் சொத்து சேர்த்தாலும் இவர்கள் தலைமுறையினர் உண்ன உணவு இருக்கப்போவதில்லை. நஞ்சே மிஞ்சும்.


0 comments:

Post a Comment

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs