எழும் தமிழ் ஈழம்

Friday, August 21, 2009

எழும் தமிழ் ஈழம் என்றால் குற்றமா?


ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள் போன்ற வார்த்தைகளை கேட்கவே கசக்கிறது கலைஞருக்கு. அதனால்தான் அவ்வார்த்தைகளுக்கு மறைமுக தடை விதித்திருக்கிறது தமிழக அரசு. எழும் தமிழ் ஈழம் என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 17-ஆம நாள் இன விடுதலை அரசியல் மாநாடு நடத்தினர் விடுதலை சிறுத்தைகள். அன்னிகழ்வுக்காக அவர்கள் அமைத்திருந்த விளம்பரப் பதாகைகளில் ஈழ வரைபடம், எழும் தமிழ் ஈழம் என்கிற வாசகம், தேசியத் தலைவரின் படம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

ஆனால் விழாவன்று காலை ஈழம் என்ற வார்த்தையும் பிரபாகரன் படமும் வெள்ளைத்தாள் கொண்டு, காவல்துறையால் மறைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் விளம்பரத் தட்டிகள் கிழித்தெரியப்படிருந்தன. இதனால் ஆவேசமுற்ற திருமா எழும் தமிழ் ஈழம் என எழுதுவதால் இறையாண்மை மீறல் ஏற்பட்டுவிட்டதா? இனத்துக்காக போராடுவது இறையாண்மை மீறல் என்றால், அத்தகைய மீறலை பிறவிப் பெருங்கடனாக நினைத்து நாங்கள் மேற்கொள்ளவே செய்வோம். எழும் தமிழ் ஈழம் என நாங்கள் முழங்குவது தவறென்றால், அதற்காக எத்தகைய தண்டனையை வேண்டுமானாலும் எங்களுக்கு கொடுங்கள். ஈழத்தில் போராடி செத்தவர்களில் நாங்களும் ஒருவராக இருந்துவிட்டு போகிறோம். தனிஈழத்தை அங்கிகரியுங்கள்.... புலிகள் அமைப்பை மக்கள் இயக்கமாக அனுமதியுங்கள்.... பிறந்த மண்ணை இழந்து தவிக்கும் என் தமிழினத்தை கைதூக்கி விடுங்கள்... அன்றைக்குத்தான் எங்கள் ஆவேசம் அடங்கும்..... எங்களின் மூர்க்கம் முடங்கும் என்று கொதித்திருக்கிறார்.

இம்மாநாடு முடிந்த அடுத்தநாள் நாளேடுகளில் ஒரு விளம்பரத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவதும், தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களின் பெயரையோ, படத்தையோ விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டுள்ளது.

முன்பு தமிழ்நாட்டில் ஈழ அதரவு நிலை எழுச்சிபெற்ற போது, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதை தடை செய்ய கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. வழக்கறிஞர்கள் போராட்டம் தீவிரமானபோது காவல் துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதலை உண்டாக்கி போராட்டம் திசை மாற்றப்பட்டது. இப்பொழுது மீண்டும் மக்கள் எழுச்சியுற்று போராடுவார்களோ என்ற அச்சத்தால இவ்வாறு அடக்குமுறையை ஏவுகிறார்.

தேர்தலுக்குப்பின் அனைத்து தரப்பினரும் ஊமயாகிவிட்டனர். தேர்தலுக்கு முன்பு போட்டிபோட்டுக்கொண்டு தமிழினத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சிகள் இன்று வாய்திறக்க மறுக்கின்றன. அவர்கள் வியாபாரம் முடிந்துவிட்டதல்லவா? சிறுத்தைகள் ஆடுகளாகிவிட்டன என்று நையாண்டி செய்தனர் கம்யுனிஸ்ட்டுகள். இன்று சிறுத்தைகள் சீருகின்றன. ஆனால் கம்யுனிஸ்ட்டுகளை காணவில்லை. வைகோ வனவாசம் போய்விட்டார். செல்விக்கு திருமதியை எதிர்த்துப் போராடவே நேரம் போதவில்லை. ஆனால் எம்மினம் உள்ளுக்குள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அது பொங்கும்போது தமிழ்நாட்டிலும் புரட்சி வெடிக்கத்தான் போகிறது.

ஈழமும் ஊடகமும்..

Tuesday, August 18, 2009


சினேகா, பத்மா மற்றும் ஈழத் தமிழர்.....

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் பெய்துவரும் மழையால், முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நம் உறவுகள் சொல்லவொன்னா துயருக்கு ஆளாகியுள்ளனர். மழைக்கு முன்னரே ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு வந்த அவர்கள் இப்போது அதுவும் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கழிப்பிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மனிதக் கழிவுகள் நீரில் மிதப்பதாகவும், சுகாதாரமற்ற நிலையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் கனமழை பெய்தால் நிலைமை ஐம்பது மடங்கு மோசமாகும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில், நம்மை தம் தாய்தமிழ் உறவுகள் என்று கூறிக்கொள்ளும் நம் சொந்தங்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும்? அதிர்ச்சியில் உறைந்து கிடப்பதை விடுத்து அவர்களுடைய மீள்குடியேற்றத்தை விரைவு படுத்த தமிழக, இந்திய அரசுகளை நிர்பந்திக்கவேண்டும்.

இந்நிலையில் நம்முடன் இணைந்து குரல் கொடுக்கவேண்டிய ஊடகங்களோ ஈழத் தமிழர் துயர் எதையும் வெளியிடாமல், சிங்கள நாய்களின் புளுகுகளை அரைப் பக்க அளவிற்கு வெளியிடுகின்றன. அப்படியே வெளியிட்டாலும், திரைப்படங்களின் முகப்பில் நாயகன், நாயகி பெயரையடுத்து மற்றும் பலர் என்று போடுவதைப்போல்தான் ஏனோ தானோ என்று வெளியிடுகின்றன. ஆனால் தமிழகத்தின் நெ.1.என்று தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்ளும் மூன்று பத்திரிக்கைகள், ராஜபக்சே நம் தேசியத் தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசியதை கட்டம்கட்டி வெளியிட்டன.

தமிழனின் வேர்வையை காசாக்கி பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்கின்றன. நம் உறவுகள் அங்கே மழையில் நனைந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தி நம் காதுகளை எட்டியபோது, சிநேகாவிற்கு ஆபாச குறுஞ்செய்தி வந்ததையும், நடிகை பத்மா விடுதலை ஆன செய்தியையும் தொடர்ந்து வெளியிட்டு ஊடக ......சாரம் செய்து மகிழ்ந்தன.

முன்பின் அறியாத வெளிநாட்டவர்கூட நமது சொந்தங்களுக்காக குரல்கொடுத்த வேளையில், தமிழக ஊடகங்கள் ஹர்பஜன் சிங்கும், தோனியும் ஒரு கோடி ரூபாய்க்கு கார் வாங்கிய செய்தியை முன்னிலைப்படுத்தின. தமிழக ஊடகங்கள், தமிழ் மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவை. சேவை செய்யாவிட்டாலும் துரோகமாவது செய்யாமல் இருக்கட்டும்.

நஞ்சே மிஞ்சும்....

Saturday, August 15, 2009

இயற்கைக்கும் உழவுக்கும் வந்தனை செய்வோம்.....

"தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டம் 2009" நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண்மையை முறைப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் இம்மசோதாவின்படி, வேளாண்மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அதில் வேளாண் பட்டதாரிகளின் பெயர்களை பதிவு செய்து, அவர்கள் மட்டுமே வேளாண்மை தொடர்பாக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவேண்டும். வேறு யாராவது விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்களுக்கு ரூ.5000 அபராதமும், மீண்டும் அவ்வாறு செய்தால் ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் "இயற்கை விவசாய முறை தடுக்கப்படும், மரபணு மாற்ற தொழில்நுட்பங்கள் விவசாயிகள் மீது திணிக்கப்படும், விவசாயிகள் வேளாண்மயிலிருந்து ஒதுக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்கும்" என்றுகூறி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் உரங்களையும், களைக்கொல்லி போன்ற பூச்சிமருந்துகளையும் மண்ணில் கொட்டியதால் நம் தாய்மண் வளமிழந்து நஞ்சாகிப் போனதுடன், சுற்றுச்சூழலும் மாசடைந்து கிடக்கிறது. இப்போது சில காலமாக நம்மாழ்வார் போன்ற விஞ்ஞானிகளும், விகடன், தினமலர் போன்ற ஊடகங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதைத் தடை செய்யவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை தமிழக அரசின் கையில் இருக்கும்போது. இம்மசோதாவின்படி நியமிக்கப்படும் வேளாண்பட்டதாரிகள் விவசாயிகளுக்கு அதிக அளவு உரமிடவும், பூச்சிமருந்து அடிக்கவும் சிபாரிசு செய்வார்கள். அதன் மூலம் ஆதாயம்பெரும் நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவார்கள். உர இறக்குமதியிலும் லாபம் பார்க்கலாம். உரக்கலப்படம் செய்பவர்களை அனுசரித்தால் அவர்களிடம் இருந்தும் வருமானம் வரும்.அதனால்தான் இம்மசோதாவை எதிர்க்கட்சிகளும் எதிர்க்கவில்லை. நாளை ஆளும் கட்சியானால் அவர்களுக்கும் லாபம்தானே?

பூமி வெப்பமடைதலுக்கான நான்கு காரணங்களில் விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன பூச்சிகொல்லிகளும், உரமும் ஒன்றாகும். மேலும் ரசாயனங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ததால் விவசாயிகளின் நண்பன் எனப்படும் மண்புழுவைக்கூட அழித்துவிட்டு இப்போது செயற்கையாக உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். இனி விவசாயிகளின் பெரிய சொத்தான விதைமுதலையும் இழந்துவிட்டு10கிராம் 500, 1000 என்று கொடுத்து வாங்கும் நிலை வரப்போகிறது.

ரசாயனங்களைக் கொட்டி மண்ணைக்கொன்றபின் விவசாயமே செய்யமுடியாது. உணவுப்பொருட்களும் உற்பத்தியாகாது. ஆனால் அதிலும் அரசியல் வா(வியா)திகளுக்கு லாபம்தான். உணவு தானியங்களை இறக்குமதி செய்து அதிலும் கொள்ளை அடிக்கலாமே...... ஆனால் இத்தனை வழிகளில் சொத்து சேர்த்தாலும் இவர்கள் தலைமுறையினர் உண்ன உணவு இருக்கப்போவதில்லை. நஞ்சே மிஞ்சும்.


தே.பா.சட்டம்...

Friday, August 14, 2009

தே.பா.சட்டம் = தேவையில்லாமல் பாயும் சட்டம்...

கோவையில் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த குட்டி மணி இன்று மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதற்கு முன்பும் வைகோ, சீமான், கொளத்தூர் மணி போன்றோர் தமிழக அரசால் தே.பா. சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை "தே.பா.சட்டத்தில் கைது செய்தது செல்லாது" எனக்கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக அவர்கள் மீது தே.பா.சட்டம் பாய்ந்தது. "தடை செய்யப்பட இயக்கங்களை ஆதரித்து பேசுவது குற்றமல்ல" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தினமும் செய்தித்தாள் படிக்கும் என் போன்ற சாமான்யர்களுக்கே தெரிந்திருக்கும்போது மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக செயல்படக் காரணம் என்ன? இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான கைது நடவடிக்கைகளால் எவ்வளவு அரசுப்பணம், காவல்துறையினரின் பணிகள், நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன? கைது செய்யப்படுபவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகிறார்கள்? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? கண்டிப்பாக மாநில அரசுதான் பொறுபேற்க வேண்டும். இனிமேலாவது இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பொய்களின் நாடு

Tuesday, August 11, 2009

மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கே....

விடுதலைப் புலிகளை முற்றிலும் அளித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிக்கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு பேடியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இப்பொழுது, அறவழியில் போராட முன்வந்திருக்கும் விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும் கைது செய்யவோ அல்லது கொலை செய்யவோ முயற்சிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டார். மீதமுள்ள சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் மற்றும் இளையதம்பி ஆகியோரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் புலிகள் இயக்கத்தை சேர்ந்த மிச்சங்கள் எங்கிருந்தாலும், அவர்களையும் பிடித்து அழிப்போம் என்கிறது இலங்கை அரசு.

ஏற்கனவே நீண்டகாலம் அறவழியில் போராடி, இலங்கை அரசின் தொடர் அடக்குமுறைகளுக்கும், அராஜகத்திற்கும் நிறைய உயிர்களை பலிகொடுத்த பிறகுதான், வேறு வழியின்றி தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த ஆயுதப் போராட்டமும் பன்னாட்டு உதவியோடு முறியடிக்கப்பட்டது.

இப்பொழுது புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் அறவழி அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சூழலில், இலங்கையின் இதுபோன்ற குறுக்குவழி அரசியல் அடக்குமுறைகள் தமிழர்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்து அவர்களை மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கே இழுத்துச்செல்லும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தினர் மீண்டும் ஒன்று சேர்ந்து தலைதூக்கும் வாய்ப்பு அடியோடு தகர்க்கப்பட்டுவிட்டது எனவும் , அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் புலிகள் இயக்கம் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டது எனவும் கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார். அது அவன் காணும் பகல் கனவு. தனி ஒரு நபரை கைது செய்வதன் மூலம் அழிந்து விடக்கூடியதா புலிகள் இயக்கம்? இலங்கையில் கடைசித் தமிழனின் உயிர் இருக்கும் வரை, இயக்கம் உயிரோடுதான் இருக்கும்.

அவனது அண்ணன் அண்டப்புளுகன் மகிந்த ராஜபக்சே "இலங்கைக்கும் அப்பாற்பட்டு தனி ஈழம் அமைக்க பிரபாகரன் கனவு கண்டார். அவரது இயக்கத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்த்தால் அவை இலங்கை ராணுவத்தை மட்டும் எதிர்த்து போரிட வாங்கப்பட்டதாக தெரியவில்லை. பெரும் போருக்காக வாங்கப்பட்டவை" என்று கூறியுள்ளான்.

அட அறிவிலியே! அவர்களிடம் அவ்வளவு ஆயுதம் இருந்திருந்தால் இப்போது நீ பேசிக்கொண்டிருக்க முடியுமா? புலிகளின் விடுதலைப் போரை, நாடு பிடிக்கும் ஆசையால் நடந்ததாக காட்டி, தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தும் முயற்சி இது. இலங்கையின் அரசியல் பொய்களின் மீதும், அடக்குமுறைகளின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.






 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs